சட்டமன்றத் தொடர் இன்று (ஜனவரி 9) மாலை வரை நடைபெறும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று அதிகாலை அந்தமான் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அந்தமான் திமுக சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தல், திமுக நிர்வாகிகளின் திருமண நிகழ்வுகள், கூட்டங்கள் ஆகியவற்றுக்காக இரண்டு நாள் பயணமாக ஸ்டாலின் அந்தமான் சென்றுள்ளார். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலின், அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கு.க. செல்வம் ஆகியோர் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பினர்.
அண்மைக் காலமாகவே ஸ்டாலினின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் தீவிரமாகக் கண்காணிக்கும் மத்திய உளவுத்துறையினர் இந்த பயணத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.இதற்குக் காரணம் அவர்களுக்கு ரகசியமாய் கிடைத்த ஒரு தகவல்தான். ஸ்டாலினின் வணிகத் தொடர்புகளை கவனித்துக் கொள்பவரும், நீண்ட நாள் நண்பருமான ராஜாசங்கர் நேற்று தனியாக அந்தமான் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரையடுத்தே ஸ்டாலின் தன் மனைவி, கட்சி நிர்வாகிகள் சகிதமாக இன்று புறப்பட்டுள்ளார்.
ராஜா சங்கர் முன்னே செல்ல ஸ்டாலின் பின்னே செல்வதற்கான முக்கியத்துவம் என்ன என்பதை அந்தமானில் இருக்கும் மத்திய உளவுத்துறையினர் சில நாட்களாகவே விசாரித்து, ‘அந்தமானில் இருக்கும் மிகப்பெரிய மர அறுவை ஆலை தொடர்பாக இந்த பயணம் இருக்கலாம்’ என்று முதல் கட்ட குறிப்பை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்தத் தகவலை அடுத்து சென்னையில் இருந்து மத்திய உளவுப் பிரிவின் இரு சிறப்பு அதிகாரிகள் அந்தமானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலினின் அந்தமான் பயணம் விரைவில் அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.�,