வாக்குப்பதிவு செய்ததற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே அமைச்சர் செல்லூர் ராஜூ அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை முதலே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்துச் சென்றனர்.
அதுபோன்று அமைச்சர் செல்லூர் ராஜூவும் தனது குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது, விவிபேட் இயந்திரத்தில் அவரின் வாக்கிற்கான ஒப்புகை சீட்டு வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம், முறையிட்டதோடு, தனது வாக்குப் பதிவாகியதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குச்சாவடியிலேயே அமர்ந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பரிசோதித்து செல்லூர் ராஜூவின் வாக்கு விழுந்திருப்பதாகக் கூறிய பிறகே, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இந்த வாக்குச்சாவடியில் 15 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.
**-பிரியா**
�,”