தவறாக பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்: காவல்துறைக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி.அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறை பின்பற்றவில்லை என்றும் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து இந்த வழக்கை முகுந்த் சந்த் போத்ரா மகன் ககன் சந்த் போத்ரா நடத்தி வந்தார்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சட்ட விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்று கூறி இவ்வழக்கில் தமிழக டிஜிபியை 5ஆவது எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்த நீதிபதி, தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதை மீறி ஓய்வு பெற்ற பின்னரும் அரசு சின்னங்களை அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்கச் செய்வார்கள் என்று காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினார்.

மேலும் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளைத் தமிழக டிஜிபியும் சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share