எதிர்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்!

politics

நாடாளுமன்றத்தின் மாண்பை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.

பெகாசஸ் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது. கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி எதிர்கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கையில் வைத்திருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எதிர்கட்சி உறுப்பினர் அமளியில் ஈடுபட்டார். அதுபோன்று நேற்றும், காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் காகிதங்கள் மற்றும் கோப்புகளை கிழித்து அவைத் தலைவர் இருக்கையின் மீதும், அமைச்சர்களை நோக்கியும் வீசினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து சபையை செயல்படவிடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்று(ஜூலை 29) காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியவுடன், நேற்று நடந்த சம்பவத்துக்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “நேற்றைய சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் சபையின் விதிமுறைகளுக்கு எதிரானது. நேற்று நடந்த சம்பவம் சபையின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது. தலைவர் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் அதுகுறித்து என்னிடம் அணுகலாம். அதை தவிர்த்து நாற்காலியில் காகிதங்களை எறிவது ஏற்கத்தக்கது அல்ல. இங்குள்ள பிரதிநிதிகள் லட்சக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையதல்ல. சபையின் மாண்பை களங்கப்படுத்தும் விதமாக உறுப்பினர்கள் தொடர்ந்து நடந்தால், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டவுடன், இருஅவைகளின் எதிர்கட்சி தலைவர்களை ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி சந்தித்தனர்.

அப்போது, நாடாளுமன்ற கூட்டத்தை அமைதியான முறையில் நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மறு கோரிக்கை வைத்த எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *