இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலின்போது ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை கொடுங்கையூரில் உள்ள எம்ஜிஆர் நகர்ப் பகுதியில், திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது திமுகவைச் சேர்ந்த, தற்போது அமைச்சராக உள்ள சேகர்பாபு, லோகநாதன், கணேசன், பிரபு ஆகியோருக்கும் அதிமுகவைச் சேர்ந்த குமார், ஜெயபால், லதா, சீனிவாசன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது அளித்த புகாரின் பேரில் அனைவரது மீதும் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று (அக்டோபர் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது சேகர்பாபு உள்ளிட்டோர் இவ்வழக்கில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
**-பிரியா**
�,