தமிழக சட்டமன்றம் மற்றும் ஒன்றிய நாடாளுமன்றம் ஆகியவை இன்று (செப்டம்பர் 14) காலை கூடுகின்றன.
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. இதற்காக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போதைய சட்டமன்றம் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால்… சமூக இடைவெளி அடிப்படையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டுமென்ற கட்டாயத்தின் பேரில் சட்டமன்றம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது, இரு தினங்களுக்கு முன்பாகவே கலைவாணர் அரங்கம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது.
முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என சட்டமன்றம் தொடர்பான அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவர்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.
இதேபோல மார்ச்சில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றமும் இன்று கூடுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது அக்டோபர் 1 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 நாட்களில் 18 அமர்வுகளை நடத்த இருக்கும் இந்தக் கூட்டத்தொடரில் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் வேலை நாட்களாக இருக்கும். மழைக்காலக் கூட்டத் தொடரின்போது 45 மசோதாக்கள் மற்றும் 2 நிதி சார்ந்த விஷயங்கள் உள்ளிட்ட 47 சப்ஜெக்ட்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சமூக இடைவெளியோடு கூடும் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றுக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரச் சரிவு, சீன எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
**-வேந்தன்**
�,