பஞ்சாப்பில் முதல் தலித் முதல்வர்

politics

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் செப்டம்பர் 18ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதையடுத்து நேற்று (செப்டம்பர் 19) பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னி மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நெருக்கமானவர். மேலும் அமரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்.

பஞ்சாப் விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ட்விட்டரில் புதிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவரின் அதாவது முதல்வரின் பெயரை அறிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை செப்டம்பர் 19 அன்று சந்தித்தனர். புதிய ஆட்சி அமைக்க சரண்ஜித் சிங் உரிமை கோரினார்.

அதன்பின், “காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் ஒருமித்த முடிவுக்குப் பிறகு, நாங்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். பதவியேற்பு விழாவுக்கு ஆளுநர் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று பஞ்சாபின் முதல்வராகப் பதவியேற்க உள்ள சன்னி கூறினார்.

பஞ்சாப் வரலாற்றிலேயே தலித் இனத்தைச் சேர்ந்தவர் முதல்வராகப் பொறுப்பேற்பது இப்போதுதான் நடக்கிறது. சரண்ஜித் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தலித் வாக்குகளை வெல்லும் முயற்சியாகக் கருதப்படுகிறது. பஞ்சாப் மாநில மக்கள்தொகையில் தலித் மக்கள் 32% உள்ளனர்.

தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் சிரோமணி அகாலிதள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவி தலித்துக்கு அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாகத்தான் காங்கிரஸ் முதல்வர் பதவியையே தலித் சமூகத்துக்கு ஒதுக்கியுள்ளது.

தலித் முதல்வரை செலக்ட் செய்யும் முன்னர் காங்கிரஸின் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். பஞ்சாப்பில் உள்ள 32% தலித் வாக்குகள் சிரோமணி அகாலிதளத்தின் வாக்குறுதியால் காங்கிரஸிடம் இருந்து கை நழுவக் கூடாது என்ற அடிப்படையில் தலித் முதல்வரை உறுதி செய்தது காங்கிரஸ்.

இந்த நிலையில் புதிய முதல்வருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. “பஞ்சாப்பில் முதல்வராகியிருக்கும் சரண்ஜித் சிங் சன்னிஜிக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். அவர்களின் நம்பிக்கை மிக முக்கியமானது” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0