கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி7 மற்றும் நேட்டோ மாநாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர ஜி7 அமைப்பு நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா மீது கடும் தடைகளை விதித்து உக்ரேன் நாட்டிற்கு உங்கள் உதவிகளை வழங்க வேண்டும். உக்ரைன் கிழக்கு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் செவிரோடோனெட்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றிவிட்டன. மேலும் இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் மீண்டும் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.” என்று தெரிவித்தார்.
.