அக்னிபத் ஆர்.எஸ்.எஸ் கொள்கை திட்டம்: வைகோ

politics

தரைப் படை, கடற் படை, வான் படை என முப்படைகளிலும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் வகையில் அக்னிபத் என்ற திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது,

17.5 முதல் 21 வயதுடைய ஆண்கள், பெண்கள் மருத்துவ தகுதியின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் பணிக்குச் சேரலாம். திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 46,000 பேர் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றும் அக்னி வீரர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். இந்த திட்டத்தின்மூலம் 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள். 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள்.

இந்த திட்டத்துக்கு வட மாநில இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகாரின் அரா முதல் ஹரியானாவின் பல்வால் வரை, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவிலிருந்து குவாலியர் வரை மற்றும் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. இந்த போராட்டத்தால் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன.

தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இன்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

இதுபோன்று அக்னிபத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இது ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் திட்டம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 17) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது நியாயமற்ற தேர்வு முறை; இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பிகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிகாரில் ரயிலுக்குத் தீ வைத்துள்ளனர்.

நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர்.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.

அதுமட்டும் அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. “இந்திய ராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே ‘அக்னிபத்’ என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.

அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்புத் தேர்வு சான்றிதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம்.

இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ‘அக்னி பாத்’ திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *