கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தை ஒழிக்க, ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். நேற்று (ஜூன் 5) உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓர் இயந்திரத்தை அறிமுகம் செய்தார். இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தினால் ஒரு மஞ்சப்பை வரும்.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசும், சுற்றுச்சூழல் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் விளைவாகத்தான் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மஞ்சப்பை வழங்கும் 25 இயந்திரங்களை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 25 இயந்திரங்களும் கள ஆய்வுகளுக்காகத் தொடங்கப்பட்டது. மேலும் சென்னை கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு இந்தத் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடமிருந்து இந்தத் திட்டத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நாளில் நமக்கு இருப்பதே ஒரே உலகம் என்பது நினைவில் கொண்டு நம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்று கூறியுள்ளார்.
.