சிவகங்கை காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது பஞ்சாபில் இருக்கும்
மின்சார நிறுவனத்திற்கு சீன பணியாளர்களை வரவழைப்பது தொடர்பாக விசா வழங்கியதில் மோசடி செய்ததாக கார்த்தி மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தியது.
இதன் அடுத்த கட்டமாக கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளியும் அவரது ஆடிட்டருமான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தன்னையும் கைது செய்துவிடுவார்களோ என்ற எச்சரிக்கையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
தற்போது வெளிநாட்டில் இருப்பதால், தன்னைக் கைது செய்ய சிபிஐ முடிவு செய்யும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியிருந்தார்.
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த கோரிக்கையை சிபிஐ நிராகரித்தது. இந்த நேரத்தில் இந்தக் கோரிக்கை பொருத்தமற்றது என சிபிஐ தெரிவித்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நாக்பால் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய முடிவு செய்தால்… மூன்று வேலை நாட்களுக்கு முன் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். எனவே வரும் திங்கட்கிழமை வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை
**வேந்தன்**