கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாப்பைக் கழற்றச் சொன்ன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு செயலாளர் சுரேஷ் விளக்கமளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்றது.
அப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதினர்.
அப்போது முதன்மை தேர்வு கண்காணிப்பாளராக பணியிலிருந்த, கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, மாணவிகளை ஹிஜாப்பைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சொன்ன விவகாரம் சர்ச்சையானது. இந்த தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானதால் மாவட்ட கல்வித்துறை ஆசிரியர் சரஸ்வதியை அந்தப் பள்ளியிலிருந்து வேறுவொரு அரசுப் பள்ளிக்குத் தேர்வு கண்காணிப்பாளராக மாற்றியது.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் [ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?](https://minnambalam.com/politics/2022/05/17/10/kallakurichi-hijap-issue-explanation) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதைத்தொடர்ந்து நம்மிடம் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் சுரேஷ், அன்று நடந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், “உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் சரஸ்வதி. அந்தப் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள்தான் அதிகம் படிக்கின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பள்ளியில் அன்று நடந்த சம்பவம் வேறு.
ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் பிட் மறைத்து வைத்து எழுதியதால், தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் சரஸ்வதி ஹிஜாப் அணிந்து வந்த அணைத்து மாணவிகளையும் ஹிஜாப்பை கழற்றி வைத்துவிட்டுத் தேர்வு எழுத சொனார். ஆனால்
அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் கோபத்தை உண்டாகும் வகையில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியிருக்கின்றனர்.
இதனால், மதப் பிரச்சனையாக உருவெடுத்ததைத் தடுக்கும் வகையில் மாவட்ட கல்வித்துறை, ஆசிரியருக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தேர்வு அறை கண்காணிப்பாளர் பொறுப்பை மட்டும் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றியது. மாணவர்களும் ஆசிரியர்களும் தாய் பிள்ளை போலத்தான் பழகிவருகிறோம்.
வகுப்பில் மாணவர்களைக் கண்டிக்கும் போது கோபம் இருக்கும், ஆனால் அதன் பிறகு மறந்து விடும். மாணவர்கள் ஆசிரியர்கள் பிரச்சினையை அரசியலாக்காமல் இருப்பது நல்லது” என்றார்.
**-வணங்காமுடி**