இரும்பு பீம் கொண்டு தமிழகத்தில் தேவைப்படும் இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இரு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானிய கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “ சென்னை, ராயபுரம் எம்.சி.சாலை பகுதியில் மனை இல்லாத காரணத்தால் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க முடியாத நிலையில் இருக்கிறது. தி.நகரில் அகலமான நடைபாதை இருப்பது போல எம்.சி.சாலை பகுதியையும் மாற்ற இருக்கிறோம். ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும்” என்றார்.
மேலும் அவர், ”வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளது.
சென்னையின் தி.நகரில் 2+6 என்ற அளவில் ஒரு கட்டடம் 222 கார்கள் நிறுத்தும் வகையிலும் 513 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டது. இதுபோல் இல்லாமல், இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் கட்டப்படும். வியாபார பகுதிகள் உள்ளிட்ட தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
**-பிரியா**