கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்று கடந்த மார்ச் 5ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மார்ச் 8ஆம் தேதி இவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்குத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் யுவராஜ் உட்பட 10 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்கள், நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நீதிபதி சம்பத்குமார் முன்பு தெரிவித்தனர். கொலையான கோகுல்ராஜின் தாயார் சித்ரா, என் மகனுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில், கோகுல்ராஜ் கொலை திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்பட்டது. ஆனால் தற்கொலை போன்று ஜோடிக்கப்பட்டது. இது வெறும் கோகுல்ராஜுக்கு எதிரானது மட்டுமல்ல. சமூகநீதிக்கும் எதிரானது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதம் செய்யப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத்குமார் அறிவித்துள்ளார். அதன்படி மதியம் 2 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
**-பிரியா**