பாமகவுக்குக் கிடைத்த வெற்றி போதுமானதல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் நகராட்சி வார்டுகளில் 4 இடங்களிலும், பேரூராட்சி வார்டில் 1 இடத்தையும் பாமக பிடித்துள்ளது.
கடலூர் மாநகராட்சி வார்டுகளில் 1, நகராட்சி வார்டுகளில் 5, பேரூராட்சி வார்டுகளில் 3,
காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டுகளில் -2, பேரூராட்சி வார்டுகளில் -2.
கிருஷ்ணகிரி மாநகராட்சி வார்டுகளில் 1, பேரூராட்சி வார்டுகளில் 2
வேலூர் மாநகராட்சி வார்டுகளில் 1, பேரூராட்சி வார்டுகளில் 5
ஈரோடு நகராட்சி வார்டுகளில் 2, பேரூராட்சி வார்டுகளில் 4,
சேலம் நகராட்சி வார்டுகளில் 12, பேரூராட்சி வார்டுகளில் -15,
திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில் 4, பேரூராட்சி வார்டுகளில் 6
திருவள்ளூர் நகராட்சி வார்டுகளில் 1, பேரூராட்சி வார்டுகளில் 2,
மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளில் 4, பேரூராட்சி வார்டுகளில் 2,
ராணிப்பேட்டை நகராட்சி வார்டுகளில் 8, பேரூராட்சி வார்டுகளில் 4,
விழுப்புரம் நகராட்சி வார்டுகளில் 5, பேரூராட்சி வார்டுகளில் 1,
கன்னியாகுமரி நகராட்சி வார்டுகளில் 1,
திருப்பத்தூர் நகராட்சி வார்டுகளில் 1,
தேனி நகராட்சி வார்டுகளில் -1,
நாமக்கல் பேரூராட்சி வார்டுகளில் 1,
தஞ்சாவூர் பேரூராட்சி வார்டுகளில் 6,
செங்கல்பட்டு பேரூராட்சி வார்டுகளில் 5,
தர்மபுரி பேரூராட்சி வார்டுகளில் 12,
கள்ளக்குறிச்சி பேரூராட்சி வார்டுகளில் 2,
அதன்படி மாநகராட்சிகளில் 5 இடங்களிலும், நகராட்சிகளில்- 48, பேருராட்சிகளில் 73 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “பண மழை, அதிகார அடக்குமுறையை மீறி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்ற வெற்றி மகத்தானது.
உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடந்தால் தான் தமிழ்நாடும், இந்தியாவும் முன்னேறும் என்பதாலும், ஜனநாயகம் தழைக்கும் என்பதாலும் பாமக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்வைத்துப் போட்டியிட்டது.
பாமகவுக்கு வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது. மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான் வாக்குகள் வாங்கப்பட்டன.
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை மூலதனமாக வைத்துத் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தன. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பணம் படைத்தவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகத் தான் கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை விடவும் ஜனநாயகத்திற்கு பணநாயகத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், ஆபத்தும் தான் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரை வெற்றி – தோல்விகள் தற்காலிகம். மக்கள் பணி தான் நிரந்தரம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக பா.ம.க எப்போதும் போல் முதல் கட்சியாக குரல் கொடுக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியைப் பெற முடியாமல் போனவர்களும், நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வழக்கம் போலக் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாமக தனித்துப் போட்டியிட்டது.
**-பிரியா**