தமிழகத்தில் இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண் 1174 av மற்றும் ஓடைகுப்பம் வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059 av,மதுரை திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17, வாக்குச்சாவடி எண் 17w , அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 15 m, 15w, திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25, வாக்குச்சாவடி எண் 57m, 57w ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் வண்ணாரப்பேட்டை வார்டில் மிகக் குறைந்த அளவிலேயே வந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். இங்கு 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 41 பேர் மட்டுமே வந்து வாக்களித்தனர்.
பெசண்ட் நகர், ஓடைக்குப்பம் , 179-வது வார்டில் காலை 10 மணி நிலவரப்படி 196 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
அரியலூர் ஜெயங்கொண்டம் வார்டு எண் 16-ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 10 மணி வரை 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17-ல் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தலில் காலை 10 மணி வரை 31% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25ல் காலை 10 மணி நிலவரப்படி 28.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.
**-பிரியா**