உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரைப் போற்றி புகழும் , வகையில் ஆண்டுதோறும் தை 2ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று திருவள்ளுவர் தினத்தில், வள்ளுவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
**பிரதமர்**
கன்னியாகுமரியில் கடல் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவரின் சிலை வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொளியை பகிர்கிறேன்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன். pic.twitter.com/l15sJhD5CR
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
**ஆளுநர் ஆர்.என்.ரவி**
மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணையமைச்சர் எல் முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
**முதல்வர் ஸ்டாலின்**
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாள்காட்டி, திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகமும் வெளியிட்டார். மேலும், திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் குறள் ஒப்புவித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
**எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி**
உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் அறநெறி கருத்துகளை எளிமையாக, உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் கூறி, நம் தமிழ் மொழியின் பெருமையைத் தரணியில் தலை நிமிரச் செய்த வள்ளுவ பெருந்தகையை அவரின் திருநாளில் போற்றி வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
**-பிரியா**�,”