’24’ படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான படம் ’24’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வசூல் ரீதியாக இப்படம் வரவேற்பை பெற்றது. மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் போற்றப்பட்டது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது. சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் தெலுங்கில் கவனம் செலுத்தத்தொடங்கினர். மீண்டும் அவர் தமிழில் படம் இயக்குவாரா என்பது தெரியாத நிலையில், விக்ரம் குமார் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அண்மையில் சூர்யாவை இயக்குவது குறித்து விக்ரம் குமார் பேட்டியொன்றில் கூறியுள்ளார். அதில் “சூர்யா சாரும் என்னிடம் பல முறை அடுத்து எப்போது என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் ஒரு கதை ஒன்றைக் கூறியுள்ளேன். அவருக்கு அது பிடித்திருந்தது. 2021ஆம் ஆண்டு நாங்கள் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் விக்ரம் குமார். இதனையடுத்து மீண்டும் இவர்கள் கூட்டணி அமையவுள்ளது உறுதியாகியுள்ளது.
சூர்யா தற்போது ஹரியுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம் என முன்னணி இயக்குநர்களுடன் இணைந்துள்ளார். இப்படங்களை முடித்தபின், விக்ரம் குமாருடன் இணைவார் என தெரிகிறது. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் ஊரடங்கு காலம் முடிந்தபின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”