சூர்யாவுக்கு அஞ்சான் மற்றும் விஷால் நடிக்க சண்டைக்கோழி 2 படங்களைத் தொடர்ந்து அடுத்தப் படத்தின் பணியைத் துவங்கிவிட்டார் இயக்குநர் லிங்குசாமி. தமிழ் நடிகர்களை இயக்கி வந்தவர், இந்த முறை தெலுங்கு நடிகரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகரான ராம் பொத்தேனி ஹீரோவாக நடிக்க லிங்குசாமி ஸ்டைலில் ஒரு படம் உருவாக இருக்கிறது. நாயகியாக உப்பென்னா படத்தில் நடித்த க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப் போகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் மாதவன் முக்கிய லீடாக நடிக்க ஒப்பந்தமாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
புது அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் இரண்டு லீட் நடிகர்களை கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது, மாதவன் மட்டுமின்றி அருண் விஜய்யிடமும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம். ராம் பொத்தேனி படத்தில் இந்த இரண்டு நடிகர்களையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாதவன் மற்றும் அருண்விஜய் இருவருக்குமே இப்போதைக்கு நல்ல மார்கெட். இரண்டு நடிகர்களுமே படத்தின் கதையைக் கேட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இருவருமே நடிக்க சம்மதம் குறித்து எதுவும் பேசவில்லை என்றே தெரிகிறது.
மாதவனுக்கு வேட்டை, ரன் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர். இப்போதைக்குச் சரிவில் இருக்கும் லிங்குசாமிக்காக இந்தப் படத்தில் நடிப்பதற்குச் சம்மதிக்க வாய்ப்பு அதிகம் என்றே சொல்கிறார்கள்.
சுவாரஸ்ய இன்னொரு தகவல் என்னவென்றால், தெலுங்கில் லிங்குசாமி அறிமுகமாகும் படம் இது. அதுமாதிரி, தெலுங்கு நடிகர்களான ராம் மற்றும் க்ரீத்தி இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். , படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். லிங்குசாமியும், தேவிஸ்ரீபிரசாத்தும் முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைகிறார்கள்.
**-ஆதினி **
�,