தேர்தலில் முறைகேடு – சிசிடிவி காட்சியைக் கொடுங்கள் : பிரகாஷ் ராஜ்

entertainment

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்தது. இதில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்து பிரகாஷ்ராஜ், ‘மா’ அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

மேலும், பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரகாஷ்ராஜ், புதிய சங்கமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகின.

இதனிடையே, மா அமைப்பு தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட கிருஷ்ண மோகனுக்கு நேற்று கடிதமொன்றை எழுதியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“தேர்தல் அதிகாரி கிருஷ்ண மோகன் அவர்களுக்கு

சமீபத்தில் முடிந்த ‘மா’ தேர்தலில் நடந்த பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீங்கள் சாட்சியாக இருந்தீர்கள். ஆவேசம் அதிகமாக இருந்தது. முன்னாள் டிஆர்சி உறுப்பினர் மோகன் பாபுவும், முன்னாள் தலைவர் நரேஷும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம்.

‘மா’ உறுப்பினர்களை அடித்து, வசைபாடி, அச்சுறுத்தினர். உங்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையும், அவர்களின் அடியாட்களையும் வாக்குச்சாவடிக்குள் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். இதில் சில காட்சிகள் ஊடகங்களிடம் கசிந்தன. நாள் முழுவதும் தலைப்புச் செய்தியானது.

மா தேர்தலும் அதற்குப் பின் நடந்த சம்பவங்களும், பொதுமக்கள் முன்னிலையில் நம்மைக் கேலிப் பொருளாக்கியுள்ளது. சில தெரிந்த நபர்களின் நடத்தை முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மா உறுப்பினர்கள், நடந்த சம்பவங்களின் உண்மைப் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நீங்கள் பேசியபோது வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பயன்பாடு பற்றிக் குறிப்பிட்டீர்கள்.

அவற்றில் எல்லாம் பதிவாகியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனவே அந்தப் பதிவுகளை எங்களிடம் பகிர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் சம்பந்தமான அத்தனை தரவுகளையும் பெறுவது எங்கள் ஜனநாயக உரிமை. தேர்தல் அதிகாரியான நீங்கள், அத்தனை சாட்சியங்களையும் 3 மாதங்கள் பாதுகாப்பது உங்கள் கடமை. தேர்தல் அதிகாரிகள் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பல்வேறு உச்ச நீதிமன்ற வழக்குகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனவே அந்தக் காணொலிப் பதிவுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனடியாகச் செயல்படாவிட்டால் அந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று நான் அஞ்சுகிறேன். இந்தக் கடிதம் பெற்றுக்கொண்டதை உறுதி செய்யவும்” பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய என்.டி.ராமாராவை கடந்து எந்த நடிகரும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது இல்லை. அவரது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் இடத்திற்கு வந்தவர்களில் மோகன்பாபு, சிரஞ்சீவி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இருவருக்கும் இடையில் எப்போதும் உரசல் இருக்கும் என்பார்கள்

மொழி, இன உணர்வு உச்சத்தில் இருக்கும் தெலுங்கு தேசத்தில் கன்னடரான பிரகாஷ்ராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை மோகன்பாபு தரப்பு விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றலாம், சம்பாதிக்கலாம்.

ஆனால் எங்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தெலுங்கர்களுக்கு மட்டுமே உண்டு. பிறமொழிக்காரர்களுக்கு இல்லை என்பதில் மோகன்பாபு தரப்பு உறுதியாக இருந்தது. அவர்மீது இருக்கும் தொழில்ரீதியான போட்டி காரணமாக பிரகாஷ்ராஜ் சிரஞ்சீவியால் ஆதரிக்கப்பட்டார் இருந்தபோதிலும் மொழி உணர்வுடன் இருந்தவர்கள் அனைவரும் பிரகாஷ்ராஜுக்கு எதிராகவே வாக்களித்ததால் அவர் தோல்வியைத் தழுவினார்.

தன் மகன் விஷ்ணு மஞ்சு வெற்றிக்காக மோகன்பாபு கையாண்ட தேர்தல் யுக்திகள் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது. அதனை அரசியலாக்கி பொதுவெளியில் விவாத பொருளாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *