வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கும் அதனை வளர்க்கும் உரிமையாளருக்கும் இடையேயான பாசப்பிணைப்பை சமரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் படமாக வெளியாகியிருக்கிறது ‘777 சார்லி’.
கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கன்னட முன்னணி நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கிறார். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘777 சார்லி’ படத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு அழுதபடியே அவர் தியேட்டரை விட்டு வெளியில் வந்திருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “அனைவரும் பார்க்கவேண்டிய படம். படத்தில் நடித்திருக்கும் நாய் கண்ணாலேயே தனது உணர்வுகளை கடத்தியிருக்கிறது.
ஏற்கெனவே நாய்களை பற்றிய படங்கள் அதிகமாக வந்திருந்தாலும் இந்த படம் அதன் உணர்ச்சிகளை காட்டுகிறது. நாய்களின் அன்பு நிபந்தனையற்றது. தூய்மையானது.” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.
படம் பார்க்கும் போது அவர் அழுதபடி இருந்த படமும், அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
முன்னதாக, கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்பதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான ஸ்னூபி எனும் நாய் இறந்திருக்கிறது. அதன் இறுதிச்சடங்கின் போது ஸ்னூபியின் மீது படுத்து பசவராஜ் கதறி அழுத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.
777 சார்லி படத்தை பார்த்த மங்களூரு காவல்துறையினர் தங்களது போலீஸ் மோப்ப நாய்க்கு சார்லி என பெயரிட்டிருக்கிறார்கள்.
**-இராமானுஜம்**