‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ‘சந்திரமுகி’. பழைய அரண்மனை ஒன்றிற்குள் நுழையும் ஒரு குடும்பத்திற்கு அந்த அரண்மனையில் வாழ்ந்து இறந்த சந்திரமுகி என்ற நாட்டியக்காரியின் ஆவி ஜோதிகா மூலம் தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறது என்ற ஒரு வரி கதையை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் கலந்து சினிமாவாக கொடுத்து இருந்தார்கள்.
படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட படம் வெளியாகி இருபது வருடங்களுக்கும் மேலாகி இருக்கும் நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்கள். ‘சந்திரமுகி’ படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் பி. வாசுவே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கீரவாணி இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
**ஆதிரா**