மனைவி நினைவு நாளில் அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

entertainment

இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ் தன்னுடைய மனைவியின் முதல் நினைவு நாளான இன்று (மே 16) அவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் கடந்த 2018ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உலகிலேயே எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பதால் சீனாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இயக்குநராக தனது இரண்டாவது படமாக பாலிவுட் படமான ‘ஆர்ட்டிகிள் 15’ ரீமேக்காக ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை அறிவித்தார். இந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போதுதான் கொரோனா தொற்று மிகத் தீவிரமாகப் பரவியது. இதில் அருண் ராஜாவும் அவரது மனைவியான சிந்துஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இருவருமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருண் ராஜாவின் மனைவியான சிந்துஜா தன்னுடைய 38வது வயதில் காலமானார். அவர் இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இது குறித்து அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

‘உடனிரு எப்போதும் உடைந்திடாத உண்மையாய்,
உடைத்திடாத மென்மையாய்,
ஏதேதோ எண்ணங்கள் என்னைச்சூழ,
நீயே அரணாய் எனை ஆள,
உடனிரு எந்நாளும் பாப்பி’
என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அருண் ராஜாவின் இந்த பதிவிற்கு பாடகி சைந்தவி, ‘சிந்துஜா எப்போதும் உங்களுக்கு ஒரு தேவதையாக துணையிருப்பார். உறுதியாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல நடிகர் பிரசன்னா, ‘ அவர் இறந்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. அவர் எப்போதும் உனக்கு துணையாக இருப்பாள்’ என்று தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளர் டிடி, ‘ தயவுசெய்து உறுதியாக இரு. அவர் எப்பொழுதும் உனக்கு துணையாகவும், காக்கவும் செய்வார்’ என்று ஆறுதல் கூறியுள்ளார்.

இவர் மட்டுமில்லாமல் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் அருண் ராஜாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தது குறித்து அருண்ராஜா தனது சமீபத்திய பேட்டிகளில் குறிப்பிடும் போது, ‘நாங்கள் பாதிக்கப்பட்ட பொழுது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 15 நாட்கள் மருத்துவமனையில் நன்றாக ஓய்வெடுத்து சீக்கிரமே குணமடைந்து திரும்பி விடுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் மனைவியின் மரணம் நான் எதிர்பார்க்காதது. அவர் இழப்பில் இருந்து இன்னும் மீளவில்லை’ என்று குறிப்பிட்டார்.

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வருகிற 20ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *