பொதுவாக பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் உரிமையை பெற்று படம் தயாரிப்பது வழக்கம் அந்தக் கதைக்கு ஏற்ப படத்தலைப்புகளை வைப்பார்கள்.
சமீப காலங்களாக ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் தலைப்பை இன்றைய தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு சம்பந்தபட்ட நிறுவனங்கள் அனுமதி பெற்று வைக்கிறார்கள். தற்போது அந்த நடைமுறையையும் கடைப்பிடிப்பதில்லை.
அதனால் தமிழ் திரையுலகில் அவ்வப்போது பழைய படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு வைக்கும்போது சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம். தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
இந்த நிறுவனம் ஷிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு ‘குஷி’ என்ற தலைப்பை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடித்து 2000ம் வருடத்தில் வெளிவந்த படம் குஷி.
வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்பதுடன் இயக்குநர், நாயகன், நாயகி என மூவருக்கும் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் குஷி. இப்போதும் இந்தப் படத்தை டிவியில் ஒளிபரப்பினால் பலரும் தவறாமல் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு அந்தப் படம் தமிழ்சினிமா ரசிகர்களிடம் அழுத்தமாக பதிந்து போனது.
அப்படிப்பட்ட ஒரு படத்தின் தலைப்பை இப்போது நான்கு மொழிகளில் வெளியாகும் ஒரு படத்திற்கு வைத்திருப்பது தலைப்பு மீது இருக்கும் நம்பிக்கையா?அல்லது தலைப்புகளை யோசிக்கிற அளவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கு இயலாமல் போனதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
குஷி என்கிற தலைப்பில் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்கவும், இந்தியில் பர்தீன் கான், கரீனா கபூர் நடிக்கவும் ரீமேக் ஆனது. மூன்று மொழிகளில் வந்த ஒரு படத்தின் தலைப்பை இப்படி மீண்டும் வைப்பது சரியா என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் வலிமையாக எழுந்துள்ளது.
**-இராமானுஜம்**