நேற்று முன் தினம் வடிவேலு- பிரபுதேவா சந்தித்து கொண்ட வீடியோ தான் இணையத்தில் வைரலானது.
‘ஐ அம் சிங் இன் த ரெய்ன்’ என தனக்கே உரிய பிரேத்யகமான முக பாவனைகளோடு வடிவேலு இந்த பாடலை பாடிக்கொண்டே பிரபுதேவாவை அன்போடு கட்டி அணைத்து கொண்ட வீடியோ தான் இணையத்தின் வைரல் காணொளி.
பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு – பிரபுதேவா சந்தித்து கொண்டதற்கான காரணம் குறித்து படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. சுராஜ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பல வருடங்களுக்கு பிறகு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு.
காமெடி நாயகனாக இவர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வடிவேலு ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். வடிவேலு இந்த படத்திற்காக பாடுவது போன்ற காணொளி ஒன்றும் முன்பு வெளியாகி வைரலானது.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி, சிவாங்கி என பல புது காம்போ ஒன்றிணைந்திருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் பிரபுதேவாவும் வடிவேலுவும் சந்தித்து இருக்கிறார்கள். பிரபுதேவாவும் வடிவேலுவும் இணைந்து நடித்த ‘மனதை திருடிவிட்டாய்’, ‘காதலன்’ ஆகிய படங்களில் இவர்களின் காமெடி இப்போதும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. பிரபுதேவா இயக்குநரான பின்பு கூட ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் வடிவேலுவை நடிக்க வைத்தார்.
இந்தசூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்காக கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு படத்தை தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது
படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக், இசை வெளியீடு, டீசர் குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
**ஆதிரா, இராமானுஜம்**