நடிகர் தனுஷூடன் நீண்ட நாட்கள் கழித்து நேரம் செலவிடுவதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு இயக்குநரும் தனது அண்ணனுமான செல்வராகவனுடன் தனுஷ் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நடந்து வருகிறது.
படத்துடைய அப்டேட் குறித்து செல்வராகவன் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்து கொண்டே இருப்பார். ‘காதல் கொண்டேன்’, ‘மயக்கம் என்ன’ படங்களின் வெற்றி வரிசையில் ‘நானே வருவேன்’ திரைப்படமும் கொண்டாடப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்று செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பகிர்ந்துள்ளார். அதில், ‘நீண்ட நாட்களாக நானும் தனுஷூம் ஒன்றாக நேரம் செலவழிக்க முடியாமல் இருந்தது. அதற்கு காரணம், நாங்கள் இருவரும் எங்களுடைய தனிப்பட்ட வேலையில் பிஸியாக இருந்தோம். ஆனால், இந்த குறையை போக்கும் வகையில் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்து வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. தனுஷ் எப்போதுமே என் சிங்கம். அவர் மனதும் எண்ணங்களும் தங்கம் போல’ என நெகிழ்ச்சியாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அது இந்த வாரம் 13ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ‘ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷூடன் இவர் நடித்துள்ள ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**