‘மாநாடு’ படத்தின் 100வது நாளையொட்டி நடிகர் சிலம்பரசன் ரசிகர்கள் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. மாநாடு படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த நிலையில் மாநாடு வெளியாகி 100 நாள் நிறைவடைந்ததையொட்டி சிலம்பரசன் தனது ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ட்விட்டரில் ‘நீங்க இல்லாம நான் இல்லை’ என்று நெகிழ்ச்சியுடன் கையெடுத்து கும்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தை நேற்று(04.03.2022) பார்த்தார். அப்போது பேசிய சிலம்பரசன் இந்த திரைப்படத்தின் வெற்றியை என்னுடைய திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கவில்லை, இன்றைய சூழலில் தமிழ் திரையுலகின் வெற்றியாக பார்க்கிறேன் என்றார். அத்துடன் மாநாடு தனக்கு மட்டுமில்லாமல் படக்குழுவினருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கிறது என்று கூறினார்.
மேலும் ரசிகர்களுடன் பேசிய சிலம்பரசன், “உங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். விரைவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு உங்களை (ரசிகர்களை) அழைத்து நடத்த உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
**அம்பலவாணன்**