மீண்டும் அரசியலில் நடிகர் சிரஞ்சீவி?

entertainment

தெலுங்கு சினிமாவில் எவர் க்ரீன் நடிகர் சிரஞ்சீவி. தனி கட்சி ஆரம்பித்து, அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்து ராஜ்ய சபா எம்.பி. ஆகி, மத்திய அமைச்சராகி பின்னர் அரசியலே வேண்டாம் என விலகியவர்.

மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தெலுங்கு சினிமாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைச் சிரஞ்சீவி தொடர்ந்து எடுத்துவருகிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரான பின்பு சினிமா தியேட்டர் டிக்கெட் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், டிக்கெட் விற்பனை இணைய வழியில் நடைபெறவேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அரசு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத, தொடர்ந்து இயங்க தகுதியில்லாதவை என கண்டறியப்பட்ட 185 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலை நீடித்தால் 100 கோடிக்கு மேற்பட்ட செலவில் தயாரிக்கப்படும் தெலுங்குப்படங்களின் வருவாய் பாதிக்கப்படும். தற்போது தெலுங்கில் அகில இந்தியப் படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர், ராதேஷ்யாம், பவன்கல்யாண் நடித்த படம் ஆகியவை டிக்கெட் கட்டண பிரச்சினை காரணமாக ரீலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மெகா பட்ஜெட் படங்களுக்கு மட்டுமாவது மும்பை போன்று டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆந்திர அரசிடம் தெலுங்கு திரையுலகம் அனுமதி கேட்டுவருகிறது.

அதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து வருகிறார். இதனை மையப்படுத்தி, கடந்த சில தினங்களாக சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் குதிக்கப் போவதாக தெலுங்கு செய்தி சேனல்கள் சில செய்திகளை வெளியிட்டன.

அவற்றிற்குப் பதில் தரும் விதமாக தன்னுடைய நிலையை தெளிவாக விளக்கியுள்ளார் சிரஞ்சீவி. “தெலுங்குத் திரையுலகத்தின் நலன் கருதி, தியேட்டர்களின் வாழ்வாதாரம் கருதி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசியதை, நான் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்காக சந்தித்துப் பேசியதாக சில மீடியாக்களில் செய்தி வெளிவந்துள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியலை விட்டு நான் விலகியிருக்கிறேன், மீண்டும் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன். யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடாதீர்கள். இந்த செய்திகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *