தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசூரங்களைப் பாடி மக்கள் இறைவனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தை திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில் அனைவரின் இல்லத்திலும் ஒலிக்கக் கூடிய பாடலாக ‘சிங்கார மதன மோகனா.. பாடல் உருவாகியிருக்கிறது.
தமிழ் திரையிசை உலகில் கிருஷ்ணரைப் பற்றிய பாடலாக ‘முகுந்தா..முகுந்தா..’ என்ற தசாவதார பட பாடல் இடம்பிடித்திருந்தது. பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் ‘சிங்கார மதன மோகனா.. ’என்ற பாடல் விரைவில் அனைவரின் மனதிலும், கிருஷ்ண பகவானைப் பற்றிய ஒப்பில்லா துதிப் பாடலாக இடம்பிடித்து புதிய சாதனையை படைக்கும் என்கிறது படக்குழு.
**அம்பலவாணன்**
�,