முறைகேடான பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவருடைய கூட்டாளிகள் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கத்தையும் கைப்பற்றினர். இதில், 34 கோடி ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் சேகர் ரெட்டி மீதும், அவருடைய கூட்டாளிகள் சீனிவாசலு, ராமச்சந்திரன், ரத்தினம்,பிரேம்குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த மகாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் பணமும், 6.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சுமார் 7 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை புதிய இரண்டாயிரம் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சேகர் ரெட்டிக்குச் சொந்தமான 34 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே மகாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகியோரின் 12 கோடி ரூபாய் சொத்துகளையும், 6.5 கோடி ரூபாய் தங்கத்தையும், கடந்த மாதம் 23ஆம் தேதி அமலாக்கத்துறையினர் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
�,