2016-17ஆம் நிதியாண்டில் முன்னணி நிறுவனங்கள் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. அதேபோல 121 நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிப்பதையும் குறைத்துள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (2016-17) ஐ.டி. துறை, நிதி நிறுவனத் துறை ஆகியவற்றில் அதிக அளவிலான பணியிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், 121 முன்னணி நிறுவனங்களில் புதிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,012லிருந்து 7,30,694ஆகக் குறைந்துள்ளது. உலோகம், மின்சாரம், மூலதனப் பொருட்கள், கட்டுமானத் துறை, சிறு குறு நுகர்வோர் பொருட்கள் போன்ற சில துறைகளில் 11,318 பேருக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக 107 நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இருந்தன. இந்த ஆண்டுதான் ஆய்வுக்குக் கணக்கில் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பணியிழப்புகள் அதிகரித்துள்ளன. 49 நிறுவனங்களில் வேலையிழப்பில் நிகர சரிவு ஏற்பட்டுள்ளது. 68 நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைச் சற்று அதிகரித்துள்ளன. 4 நிறுவனங்களில் எந்த மாற்றமும் இல்லை” இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பிரவுஸ் ஐ.க்யூ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,”