மெர்சல் படத் தலைப்புக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. இந்தத் தலைப்பு ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவரும் ‘மெரசலாயிட்டேன்’ படத்தின் தலைப்பும் ஒரே விதமாக இருப்பதால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படத்துக்கு நஷ்டம் ஏற்படும். எனவே ‘மெர்சல்’ என்ற தலைப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 3ஆம் தேதி வரை [‘மெர்சல்’ என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் தடை](http://minnambalam.com/k/2017/10/05/1507141824) விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஸ்ரீ தேனாண்டாள் மூவிஸ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மெர்சல்’ என்ற தலைப்பும், ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பும் வெவ்வேறு ஆகும். நாங்களும் இந்த படத் தலைப்பை முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளோம். பெரும் பொருட்செலவில் இப்படத்தை எடுத்துள்ளோம். இந்த சூழலில் படத்திற்கு தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று (அக்.06) தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்தார். மெர்சல் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மெர்சல் படத்தின் மீதான சட்டச் சிக்கல் நீங்கியுள்ளது. ஆனால் கேளிக்கை வரி விவகாரத்துக்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாததால் புதிய திரைப்படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே தீபாவளி அன்று மெர்சல் படத்தை வெளியிட முடியும். இந்தத் தடைகளை எல்லாம் கடந்து தீபாவளி அன்று மெர்சல் வெளிவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.�,”