தீபாவளி வெளியீடாக விஜய், அஜித், சூர்யா படங்கள் வரும் எனக் கூறப்பட்டது. அஜித்தும், சூர்யாவும் படப்பிடிப்பு தாமதத்தால் பின்தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராகி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார்.
‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பது கடினம் என்ற நிலையில் பிற படங்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள தயங்கின. இந்தியில் பிரமாண்டமாகத் தயாராகும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ (நவம்பர் 8) படம் மட்டுமே இப்போதைக்கு தீபாவளிக்கு இந்திய அளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை விஜய் படத்துக்கான போட்டிப் படமாக தமிழகத்தில் கருத முடியாது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் நேற்று விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படமும் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டிருப்பது சினிமா வட்டாாரத்தில் ஆச்சர்யத்தைக் கிளப்பியிருக்கிறது.
விஜய் + சன் பிக்சர்ஸ் + ஏ.ஆர்.முருகதாஸ் + ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற கூட்டணியின் பலம் பற்றித் தெரியாதவரல்ல விஜய் ஆண்டனி. விஜய்க்கு அவர் நெருக்கமானவரும்கூட என்றிருக்க, விஜய் ஆண்டனியின் இந்தக் களமிறங்கல் சகலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது.
இதன் மூலத்தைத் தேடியபோது சர்கார் படத்தின் ஏரியா உரிமையை தமிழ் சினிமாவின் வியாபார போக்கைத் தீர்மானிக்கும் ஃபைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் கேட்டபோது அவர்களுக்குப் படம் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுவிட்டது.
தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகை வசூல் அறுவடை நேரம். அந்த ஆட்டத்தில் தங்களை புறக்கணிப்பதை சினிமா நாட்டாமைகளால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே தாங்கள் ஃபைனான்ஸ் செய்த படங்களை தீபாவளிக்குக் களமிறக்கி சர்கார் படத்துக்கு வியாபார ரீதியாக போட்டியைக் கொடுக்கவே ‘திமிரு புடிச்சவன்’ தீபாவளி வெளியீடு என்ற அறிவிப்பு என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
ஒருவேளை சினிமா நாட்டாமைகள் சிலருக்கு சர்கார் படத்தின் ஏரியா உரிமைகள் கிடைக்கும் பட்சத்தில் திமிரு புடிச்சவன் படம் ரிலீஸ் தேதி மாறலாம் என்கின்றனர் கோடம்பாக்கத்தில்.�,