தமிழகச் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 20) வெளியிட்டார்.
அதன்படி ”தமிழகத்தில், 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கி சேவையினை அளிக்கும் வகையில், 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஒரு நகரக் கூட்டுறவு வங்கி, ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம், ஒரு தொடக்கக் கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஒரு பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்” என்று முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கூடுதலாக 189 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் , துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித் துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்குப் பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்குப் பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
**கவிபிரியா**�,