ராம் ரஹீம் மீதான இரண்டு கொலை வழக்குகள் இன்று விசாரிக்கப்படுவதை முன்னிட்டு ஹரியானாவின் பஞ்ச்குலாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சௌதா அமைப்பின் நிறுவனர் ராம் ரஹீம் சிங் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சுனரியா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு குர்மீத் குறித்த உண்மைகளை வெளியிட்டதாகக் கூறி பூரா சச் என்ற பத்திரிகையின் உரிமையாளர் சத்திரபதி சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் அதற்கு உதவி செய்த குற்றத்துக்காகத் தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராம் ரஹீம் மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணை பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப். 16) தொடங்குகிறது. வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ராம் ரஹீமிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதையடுத்து மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில், 38 பேர் பலியாகினர், 264 பேர் காயமடைந்தனர். எனவே, தற்போதும் அதுபோல் நிகழாமல் இருப்பதற்காக பஞ்ச்குலா பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹரியானா டிஜிபி சனந்து கூறுகையில், “பஞ்ச்குலா நீதிமன்றத்தில் பாரா மிலிட்டரி படை மற்றும் ஹரியானா போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.�,