உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட கணபதியின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் கைதுசெய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதேபோல், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து துணை வேந்தர் பதவியிலிருந்து கணபதியை இடைநீக்கம் செய்வதாக ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில், கணபதி, தர்மராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 8) விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் நேரிடையாகத் தொடர்பு இல்லை என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானபாரதி வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் வாதாடும்போது, “கணபதியின் தூண்டுதலின்பேரில்தான் தர்மராஜ் சுரேஷிடம் பணம் பெற்றுள்ளார். இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை ஜாமீனில் வெளியில் விட்டால் ஆதாரங்களை அழிக்கக்கூடும்” எனத் தெரிவித்தார்.
இறுதியில், கணபதி, தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.�,