கிராமத்தைத் தத்தெடுத்து வசதிகளை செய்துத் தருவதாகக் கூறுவது எங்களுக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்பதற்காக அல்ல என்று அதிகத்தூர் கிராம மக்களிடையே கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தைத் துவங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், கட்சி குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரும் 16ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள உள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மய்யம் விசில் செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன், தாங்கள் தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் இன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தில் இன்று (மே 1) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள காரில் புறப்பட்டுச் சென்றார் கமல்ஹாசன். ஆனால் அவர் செல்வதற்கு முன்பே அங்கு கிராமசபைக் கூட்டத்தை அதிகாரிகள் முடித்துவிட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த கிராம மக்கள் முன்பு உரையாற்றினார்.
கமல்ஹாசன் பேசுகையில், நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கின்றேன். இன்றிலிருந்து இது எங்களது கிராமம். இங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு மூன்று புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும். கல்வியுடன் ஆரோக்கியமும் முக்கியம், எனவே 100 கழிவறைகளையும் கட்டித் தருகிறோம். கிராமத்தை இன்னும் பசுமையாக்க மரங்கள் நடப்படும். திறமைகளை வளர்க்கும் பயிற்சி முகாம்களும் நடத்தப்படும். ஏரிகள் புணரமைக்கப்பட்டு, சிறிய அணைகள் மற்றும் மடைகள் அதிகத்தூரில் உருவாக்கப்படும். குளத்தின் சுவர்கள் கல்பதித்து இன்னும் நீர் தேங்க வசதியாக உருவாக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
“எங்களால் எது முடியுமோ அதனைச் செய்வோம்,செய்ய முடியாததை எப்படி செய்யலாம் என்று உங்களுடன் கலந்தாலோசிப்போம் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், இங்கு நாங்கள் வந்தது இதனை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதற்காக அல்ல. இன்னும் நிறைய கிராமங்களுக்கும் செய்ய உள்ளோம். இதனை நீங்கள் மற்ற கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறினார். நீங்கள் கழிப்பறையை கட்டிமுடித்த இரண்டாம் நாள் அதனைச் சுத்தம் செய்ய நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்றும் தெரிவித்தார்.�,”