ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து சாந்தா கோச்சர் திடீரென விலகியுள்ளார்.
வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான சாந்தா கோச்சர் சர்ச்சையில் சிக்கியிருந்தார். சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்துடன் பங்குப் பரிமாற்றச் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்திலும் சாந்தா கோச்சர் சம்பந்தப்பட்டிருந்தார். இதனால் ஐசிஐசிஐ வங்கியில் சாந்தா கோச்சர் மீதான நம்பகத்தன்மை குறைந்து அவரைப் பணிநீக்கம் செய்வது தொடர்பான பேச்சுகள் வங்கியின் உயர்மட்டக் குழுவினரிடையே எழுந்தது. இதையடுத்து சில காலம் விருப்ப ஓய்வில் சாந்தா கோச்சர் சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது நிர்வாக இயக்குநர் பதவியை ராஜிநாமா செய்வதாக சாந்தா கோச்சர் அறிவித்துள்ளார். இந்த முடிவை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமைச் செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்ஷி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் 2023 அக்டோபர் 3ஆம் தேதி வரையில் நீடிக்கும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோகான் கடன் மோசடி வழக்கில் சாந்தா கோச்சரிடம் விளக்கம் கேட்டு பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரூ.25 கோடி வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. சாந்தா கோச்சர் மீதான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.�,