�
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்படும் என்று, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி முறையைக் கொண்டுவருவதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்று சமீபத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிவாயு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை ஜி.எஸ்.டி.யில் சேர்க்கப்பட்டிருந்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பழைய வரி விதிமுறைகளையும், புதிய ஜி.எஸ்.டி. வரைமுறையையும் பின்பற்ற வேண்டியுள்ளது.
இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவன இயக்குநர் ஏ.கே.ஸ்ரீநிவாசன் கூறுகையில், “ எங்களது நிறுவனத்தின் உற்பத்திச் செலவுகள் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு உயரும் அபாயம் உள்ளது. எனவே எங்களது நிறுவனத்துக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும். மேலும், இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கும் கூட்டாக ரூ.15,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும். எனவே, ஜி.எஸ்.டி.யால் எண்ணெய் நிறுவனங்களின் வரி வருவாயில் ரூ.25,000 கோடி இழப்பு ஏற்படும்” என்று கூறியுள்ளார்.�,