�
மற்ற மொபைல் செயலிகளைக் காட்டிலும் செய்தி செயலிகள் நல்ல வளர்ச்சியை அடைந்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஷாப்பிங், வீடியோ மற்றும் கேம்ஸ் போன்ற பிரிவுகளில் மொபைல் செயலி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு உயரும் என்று *மொமேஜிக்* நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், “கடந்த சில காலாண்டுகளில் டேட்டா விலைகள் குறைந்துள்ளதாலும், இணைய வேகம் உயர்ந்துள்ளதாலும் இந்தியாவில் ஷாப்பிங், வீடியோ மற்றும் கேம்ஸ் ஆகிய பிரிவுகளில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடும் வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி 2019ஆம் ஆண்டு வரையிலிருக்கும். மேலும் இப்பிரிவில் 60 விழுக்காடு வளர்ச்சி ஏற்படும் என்று எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சுமார் 20 லட்சம் மொபைல் பயன்பாட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், புதிய செயலிகளுக்கான தேவை 94 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், சமூக ஊடக செயலிகளின் பயன்பாடு 80 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், கேம்களின் பயன்பாடு 52 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பத்து மொழிகளில் பெருமளவில் செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. இச்செய்திகளை அனைத்து வயது வரம்பிலுள்ளவர்களும் படிக்கின்றனர். மற்ற செயலிகளை விட செய்தி செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.�,