dஓடிடி தளங்களுக்கு வரும் கட்டுப்பாடு!

Published On:

| By Balaji

கொரோனா காலத்தைத் தொடர்ந்து, ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் மாஸ்டர்.

இதனிடையே முக்கிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்களும் ஓடிடியில் தான் வெளியாகின. இந்த சூழலில் தற்போது திரையரங்குகள் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய மாநில அரசுகள் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கின.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். அதில், “திரையரங்கு வளாகத்துக்குள் கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். முக கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பொதுவான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடிடி இயங்குதளங்களில் கிடைக்கும் சில சீரியல்கள், படங்களுக்கு எதிராக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பத்திரிகை கவுன்சில் சட்டம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் அல்லது தணிக்கை வாரியத்தின் கீழ் வரவில்லை. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்துவதாக அதனைத் தடை செய்யக் கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அமேசான் நிறுவனத்துக்கு மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share