�
தொடர்ந்து 11ஆவது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் இருப்பதால் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.05 ஆகவும், டீசல் விலை ரூ.74.05 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோலின் விலை ரூ.2.78 மற்றும் டீசல் விலை ரூ.1.64 குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.83.18லிருந்து ரூ.82.86 ஆகவும், டீசல் விலை ரூ.78.29லிருந்து ரூ.78.08 ஆகவும் குறைந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 4ஆம் தேதி வரலாறு காணாத அளவில் ரூ.84 மற்றும் ரூ.75.45 ஆக உயர்ந்திருந்தது. அந்நாளில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.50 குறைத்தது. அதேபோல, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 மானியம் வழங்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு அடுத்த நாளில் பெட்ரோல் விலை ரூ.81.50 ஆகவும், டீசல் விலை ரூ.72.95 ஆகவும் அதிரடியாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.�,