உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் இன்று (செப்டம்பர் 18) சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக பதவி ஏற்றனர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
இதற்கிடையில், அம்மாநில சட்ட மேல்சபையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த புக்கல் நவாப், யஷ்வந்த், சரோஜினி அகர்வால், அஷோக் பாஜ்பய் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மேல்சபை உறுப்பினர் தாக்கூர் ஜைவீர் சிங் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் அவரது பதவி பறிபோனது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள ஐந்து இருக்கைகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இவர்கள் மூன்று பேரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லாத நிலையில் இவர்கள் ஆறு மாதங்களுக்குள் முறைப்படி சட்டசபை அல்லது சட்ட மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதேபோல் யோகி ஆதித்யாநாத் தலமையிலான அமைச்சரவை அங்கம் வகிக்கும் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லை.
இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் அமைச்சர்கள் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை 6 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களில் யோகி ஆதித்யாநாத், கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, சுவதந்திர டியோ சிங் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக இன்று பதவியேற்றார். துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.�,