கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று(ஜூன் 12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
கனமழையினால் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், அதனைத் தொடர்ந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர், குன்னூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஜூன் 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6ஆவது நாளாக மழை நீடிக்கிறது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண் சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மழை குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.�,