நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த சென்னை அணிக்கு முதல் தோல்வியை மும்பை அணி பரிசளித்தது. தோல்வியிலிருந்து உதறி மீண்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் நிற்கும் முனைப்பில் உள்ளது சென்னை அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (ஏப்ரல் 6) மாலை 4 மணிக்கு சென்னையில் தொடங்கியது.
டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் ஷேன் வாட்ஸன், டியூப்ளஸிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 24 பந்துகளை எதிர்கொண்ட வாட்ஸன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய டி யுப்ளஸிஸ் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 38 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே 17 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவும் நடையை கட்டினார்.
பின்னர் வந்த மகேந்திரசிங் தோனி, அம்பத்தி ராயுடு ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதலில் நிதானமாக ஆடி அடித்தளம் அமைத்து இறுதி நேரத்தில் அதிரடியில் இறங்கினர். தோனி 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ராயுடு 15 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.
161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன கிறிஸ் கெய்ல் 5 ரன்களில் ஹர்பஜன் வீசிய சுழலில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மயங் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 11 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல் 38 ரன்களுடனும் சர்ஃப்ரஸ் கான் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.�,