�
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளமான நவ்கரி.காம், ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் நவ்கரி வேலை தேடுதல் குறியீடு 2,119 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் பதிவான 1,948 புள்ளிகளை விட 9 சதவிகிதம் அதிகமாகும். காப்பீட்டுத் துறையில் வேலைவாய்ப்புகள் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளன. ஆட்டோமொபைல் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 39 சதவிகிதமும், காப்பீட்டுத் துறையில் 28 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக நவ்கரி ஆய்வு கூறுகிறது.
மேற்கூறிய துறைகள் தவிர்த்து, கட்டுமானம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறை, ஆயில் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் முறையே 12%, 10% மற்றும் 9 சதவிகித வளர்ச்சியை செப்டம்பர் மாதத்தில் பதிவுசெய்துள்ளன. இதுகுறித்து நவ்கரி.காம் மூத்த விற்பனை அதிகாரியான வி.சுரேஷ், *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் நவ்கரி வேலை தேடும் குறியீடு 17 சதவிகிதம் அதிகரித்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 9 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. பண்டிகை சீசன் நெருங்குவதால் வரும் மாதங்களிலும் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.�,