நாட்டில் அனைவருக்கும் ரூ.18,000 அடிப்படை ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்யவில்லை என்று தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய அடைப்படை ஊதியமாக எந்தத் தொகையையும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் 18,000 ரூபாய் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. ஒவ்வோர் இடத்துக்கும், பணிக்கும், திறமைக்கும் ஏற்ப அடிப்படை ஊதியம் வேறுபடும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தோஷ் கங்வார் தொழிலாளர் நலத்துறை இணையமைச்சராகப் பதவியேற்ற இரண்டே நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு முன், மத்திய ஆலோசனை வாரியத்திடம் ஆலோசனை பெறலாம் என்று ஊதிய சட்டம் 2017இல் விளக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேசிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு ஆலோசனை பெற சட்டத்தில் இடம் உள்ளது” என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, மக்களவையில் ஊதியச் சட்டம் 2017 அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,