இந்தியாவின் மிக உயர்மட்டத்தில் இயங்கும் அதிகாரிகள் மீது சுப்பிரமணியன்சுவாமி அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுக்களை சொல்லிவருகிறார். முதலில் அவர் குறிவைத்தது ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன். அடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியின் முதன்மை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். தற்போது, பொருளாதார விவகாரத்துறை செயலர் ஷக்திகாந்த தாஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
‘ஷக்திகாந்த தாஸ் மீது மகாபலிபுரத்தில் சொத்து வாங்கியது தொடர்பான வழக்கு ஒன்று இன்னமும் மிச்சம் இருக்கிறது என்று நினைக்கிறேன்’ என்று ட்விட் செய்துள்ளார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்தக் குற்றச்சாட்டு மீது உடனடியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். சீனாவில் நடக்கும் ஆசிய நாடுகள் மேம்பாட்டுக் குழுமத்தின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜெட்லி, ‘சுவாமியின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது, பொய்யானது’ என்று ட்விட் அடித்துள்ளார்.
சுவாமியின் குற்றம்சாட்டும், அதிகாரிகள் அனைவரிடமும் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு ஒற்றுமையும் இருக்கிறது. அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு பின்புலம் உடையவர். ரகுராம் ராஜன் பிறந்தது மத்தியப்பிரதேச மாநிலம் போபால் என்றாலும், அவரது குடும்பம் ஒரு தமிழ் பிராமணக் குடும்பமாகும். அரவிந்த் சுப்பிரமணியம் சென்னையில் பிறந்தவர். சென்னையில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வி கற்றவர். அதேபோல், ஷக்திகாந்த தாஸ் நேரடியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும், 1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர்.
சுப்பிரமணியன்சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அதிகாரிகளின் தேசியத்துவத்தையும், நாட்டுப் பற்றையும், ஊழல் குறித்த அவர்களின் நிலைப்பாட்டையும் சந்தேகிப்பவைகளாக உள்ளன. ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு பின்புலம் உடையவர்களாக உள்ளார்கள். சுவாமி இதையெல்லாம் ‘யதேச்சையாக’ செய்கிறாரா அல்லது தனது ‘தமிழ் நிலைப்பாட்டின் அடிப்படையில்’ திட்டமிட்டுச் செய்கிறாரா என்பது சுவாமிக்குத்தான் வெளிச்சம்.
�,