நெருக்கடியான சூழ்நிலையில், சவால்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2017-18-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு பாராட்டத்தக்கது. பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், செயல்படுத்தினால் தமிழகத்திற்கு பெரும் பயன் அளிக்கும்.
கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிற சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த உரிய திட்டங்கள் இல்லாமல், அத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், விவசாயிகள் மரணம் மற்றும் உரிய நிவாரனம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூபாய் மூன்று இலட்சம் கோடி என்றும், நிதிப்பற்றாக்குறை 41,977 கோடி என்றும் நிதியமைச்சர் கூறி இருப்பதும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.�,