மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் மின்கட்டணம் மற்றும் நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது. இதனிடையே வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் ராஜசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் கட்டணத்தைச் செலுத்துவதற்கு ஜூலை 31 வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை மே 5ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) வரை [மின் கட்டணம் வசூலிக்கத் தடை](https://minnambalam.com/public/2020/05/05/49/Madras-high-court-interim-ban-to-EB-Bill-collection) விதித்திருந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கைக் காணொளி காட்சி மூலம் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
**-கவிபிரியா**�,